ஸ்கார்பரோ பாடசாலை மாணவர்களின் ஆய்வுக் கண்காட்சி ஒன்று நேற்று வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை ஸ்காபுறோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் நடைபெற்றது. வரவேற்பு மண்டபத்தில் மேசைகள் அடுக்கப்பட்டு அவற்றின் மீது கனடா தேசியக் கொடியின் வரலாறு, சிபிசி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வரலாறு, நாட்டு நலனில் பெண்களின் பங்கு, ஆப்கானிஸ்த்தான் யுத்தத்தில் கனடாவின் பங்களிப்பு போன்ற பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் படங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. Heritage Fair என்ற நிறுவனத்தினால் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போட்டோக்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஆய்வுக் கட்டுரைகளை பெருந்தொகையான மக்கள் பார்வையிட்டனர். அவற்றைத் தயாரித்த மாணவ, மாணவிகள் அங்கு நின்று தமது ஆய்வு பற்றிய பார் வையாளர்களின் வினாக்களுக்கு விடையளித்து விளக்கிக் கொண்டிருந்தனர். அந்தந்த பாடசாலை மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட ஆய்வுகளில் சிறப்பான சில கட்டுரைகள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு அந்தந்த பாடசாலைகளின் சார்பில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
ஸ்காபுறோ மார்கோஸ் வுளுவாட் வீதியிலுள்ள சாள்ஸ் கோடன் பாடசாலையின் ஏழாம் வகுப்பு மாணவிகளான ஸ்ரீலங்காவைச் சேர்ந்த வர்சா வாசுதேவா, பாகிஸ்த்தானைச் சேர்ந்த மஜீதா கான் ஆகியோர் “நாட்டு நலனில் பெண்களின் பங்கு” பற்றிய ஆய்வுக் கட்டுரையினை காட்சிக்கு வைத்திருந்தனர். முதன் முதலாக நாசா விண்கலத்தில் 1992 ம் ஆண்டு விண்வெளிக்குச் சென்ற கனடா பெண்மணி Roberta Bondar, பெண்களின் சமஉரிமைக்காக முப்பது வருட காலம் போராடிய Doris Anderson (1921 – 2007), கனடா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து கனடா சட்ட திட்டங்களில் முக்கிய பங்களிப்பினைச் செய்தவரும், ஐ.நா.வில் மனித உரிமைக்கான உயர் ஸ்தானிகராகப் பணியாற்றியவருமான Louise Arbour போன்ற பல முக்கிய பெண்மணிகளளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையினை காட்சிக்கு வைத்திருந்தனர். இவர் ஐ.நா.வில் பணியாற்றிய போது 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் மனித உரிமை விவகாரம் சம்பந்தமாக ஸ்ரீலங்காவுக்கும் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் இத்தலைப்பிலான ஆய்வினை மேற்கொண்டீர்கள் என அவர்களிடம் கேட்ட போது ஆண்களே அதிகமாக சகல விடயங்களிலும் முன்னணி வகிக்கின்றனர். ஏன் பெண்களும் அவ்வாறு முன்னணி வகிக்கக் கூடாது என யோசித்தே அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இவ்விடயத்தில் நாம் ஆய்வு செய் தோம் என வர்சா வாசுதேவா கூறினார்.
இக்கண்காட்சியினை நடுவர்களும் வந்து பார்வையிட்டு அவற்றை தயாரித்தோரிடம் கேள்விகள் கேட்டு அவற்றுக்கான புள்ளிகளை வழங்கினார்கள். இவற்றுள் சிறந்தவையாக தெரிவு செய்யப்படும் ஆய்வுக் கட்டுரைகளின் கண்காட்சி பின்னர் மாகாணப் போட்டிகளில் பங்குபற்ற சந்தர்ப்பம் வழங்கப்படும் எனத் தெரிய வந்தது.