தாயகத்தில் காயப்பட்டு, நோய்வாய்ப்பட்டு, கதியற்று, விதவைகளாக, தாய் தந்தையரை இழந்து வருந்துகின்ற, நிர்கதியாக மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கும் எம் உறவுகள். அவர்களின் மீட்சிக்காக போராடும் “வாழ வைப்போம்” என்ற அமைப்பினூடாக இளம் கவிஞர் ரவி இந்திரனின் “கண்ணீர் வெடிகள்” கவிதை வெளியீடு மூலம் கிடைக்கப் பெறும் வருமானம் அம்மக்களின் நலனுக்காக அனுப்பி வைக்கப்படும்.
இந்த கவிநூல் வெளியீட்டு விழா கனடா சபரிமலை ஐயப்பன் ஆலய கலாசார மண்டபத்தில் மே.06.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 7:00 மணியவில் நடைபெற்றது. இந்நிகழ்வு ஈழத்துப் பாவலர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களின் தலைமையில் இடப்பெற்றது.
இந்த நூல் பற்றிய ஆய்வுரை வழங்கிய ஆய்வாளர் மேலின் இமானுவல் தெரிவிக்கையில், கனத்த சுமையான வார்த்தைகளின் வெளிப்பாடு தான் இந்த கவிதைத் தொகுதி. இதில் வார்த்தை ஜாலங்களால் கவிபாடாது உண்மையான பெறுமானமுள்ள உயிர்ப்பான வார்த்தைகள் கொண்டு கவிதைகள் யார்க்கப்பட்டிருக்கின்றன என தெரிவித்துள்ளார். “வளையாதிருத்தலே எங்கள் வாழ்வு நிமிர்ந்து நிற்றாலே எங்கள் அடையாளம்” என தனது கவிதையில் தமிழர் தம் வாழ்வியலை புடம் போட்டுக் காட்டியிருக்கும் இளம் கவிஞன் ரவி இந்திரன் கவிதைகளில் என்னால் கவிதை மரபுகளுக்குள் நின்று ஆய்வு செய்யமுடியவில்லை. ஏனெனில் அவை தாயகத்தில் எமது உறவுகளின் வலிகளின் வடுக்களாக நின்று உணர்வுகளின் குழம்புகளாக தெறிக்கின்றது என தனது ஆய்வுரையில் மேலும் கூறினார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்கள் கடினமாகக் கழிந்துகொண்டிருந்தது. புலப்பெயர் நாடுகளில் வாழ் தமிழர்கள் தெருக்களில் நின்று உறவுகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்த எங்கள் மனங்களில் எங்கள் மண்ணில் ஏற்பட்டுக் கொண்டிருந்த இழப்புக்களால் ஆழமான கருத்துக்கள் தோன்றும். அவைகளை எல்லோராலும் எழுதமுடியாது. ஆனால் இந்த நூலின் கவிஞர் அந்த வலிகளை, விரக்தியை உணர்வுகளின் வரிகளாக தனது படைப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார் என ரவீன் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
'ஈழத்து வாழ்வின் கண்ணீர்க் கதைகளை சொல்லும் இக்கவிதைநூல் வெளியீடு அம்மக்களின் காயங்களுக்கு ஆறுதல் தரும் மருந்தாக அமையுமெனில் அதுவே இக்கவிதைகளுக்கு கிடைக்கும் அதிஉச்ச கொளரவமாக இருக்கும்" என நூலாசிரியர் ரவி இந்திரன் ஏற்புரையின் போது குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எமது மக்களின் கதைகள் பதிவு செய்யப்பட்டு அவை வேற்று மொழிகளுக்கு மொழிப்பெயர்க்கப்பட்டு எமக்கு நிகழ்ந்த கொடுமைகள் உலக மக்கள் முன்னிலையில் வைக்கப்பட வேண்டும் என கூறியதுடன், படைப்பாளிகளை அந்த பணியைத் தொடர வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.
இந் நூல் வெளியீட்டின் வரவேற்புரையை விஷ்ணு சுந்தரம் அவர்களும், வெளியீட்டுரையை பொன்னையா விவேகானந்தன் அவர்களும் நிகழ்த்தினர்.
இவ் விழாவின் போது கிடைக்கப் பெற்ற பணம் முழுவதும் “வாழ வைப்போம்” பொறுப்பாளர் திரு கிருஷ்ணன் அவர்களிடம் சபையினர் முன்னிலையில் கையளிக்கப்பட்டது விசேட அம்சமாகும்.
இக்கவிதைத் தொகுப்பிற்கு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களும் பாவலர் அறிவுமதி அவர்களும் அணிந்துரையினை வழங்கியிருக்கின்றார்கள். உறவுகளின் கண்ணீர் துடைக்கும் முகமாக இந்நூல் ஏனைய நாடுகளிலும் வெளியிட்டு வைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.