
பொதுவாகவே ஒரு நாட்டின் அரசு இறையாண்மைக்கு எதிராகவும் , மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடும் போதும் சர்வதேச சட்டங்கள் அந்நாட்டில் நிலைநிறுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படும். தற்போது அதே போன்ற ஒரு கதி தான் சிறிலங்க அரசுக்கு ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவில் மனித உரிமைகள் என்ற பேச்சிற்கே இடமளிக்கப்படவில்லை என்பது தற்போது உலகறிந்த ஒரு விடயமாகி விட்டது. சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் பல சிறிலங்காவில் நடந்த போரின் இறுதிக் கால கட்டங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றினை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்துள்ளதையடுத்து ஐக்கிய நாடுகள் அமைப்பும் இதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. போரின் இறுதிக் கால கட்டங்களில் இரு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து மீண்டும் ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் அமெரிக்காவுடன் சேர்ந்து சர்வதேச நாடுகள் பலவும் உறுதியாகவே இருக்கின்றன.
அமெரிக்கா முன்மொழிந்துள்ள இந்த தீர்மனத்தின் மூலம் சர்வதேச சட்டங்கள் சிறிலாங்காவில் மீறப்பட்டதற்கான விசாரணை , நீதிக்கு புறம்பாக நடைபெற்ற படுகொலைகள், கட்டாயத்தின் பேரில் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளோர் குறித்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு ஏற்படும் என நம்பப்படுகிறது. அதனால் சரியான ஒரு திசையை நோக்கியே தற்போது பயணப்பட தொடங்கியிருக்கிறோம் என்பது தெளிவாகிறது.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க இந்த விசாரணைகளால் நாட்டின் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் மாற்றங்கள் என்ன, இந்த விசாரணைகளால் தமிழர்களுக்கான உரிய அரசியல் தேர்வு உண்டாக வழி ஏற்படுமா என்பதே தற்போது நம் முன் உள்ள கேள்வி. இதனுடன் தொடர்புடைய பல வினாக்களும் உள்ளன. இந்த தீர்மானங்களின் மூலம் உரிய தீர்வு கிடைத்து விடும் என யாராலும் உறுதியாகக் கூற முடியாது. அதே வேளையில் ஜெனீவா மாநாட்டில் முன்மொழியப்பட்டுள்ள இந்த தீர்மானம் சிறிலங்க அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை. மனித உரிமை மீறல் குறித்த பிரச்சினைகளுக்கும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கும் அரசு பதிலளித்து அவற்றை நடைமுறைக்கு கொண்டு வராவிடின் சர்வதேச நாடுகளும் செயலில் இறங்கும் நிலையை இத்தீர்மானம் உண்டாக்கியுள்ளது. இதனை ஒரு தொடக்கமாகவே பலரும் கருதுகின்றனர். உரிய தீர்வு கிடைக்கும் வரை சர்வதேச நாடுகளும் களத்தில் இறங்கி அரசை நிர்பந்தித்தால் மட்டுமே சுமூக முடிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.
இதற்கும் மேலாக ஒரு சர்வதேச ரீதியான விசாரணை ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கு ஆவன செய்வதற்கு இந்த தீர்மானம் உதவும் என எதிர்பார்க்கும் வேளையில் சிறிலங்காவின் பொறுப்புக்கூறும் தன்மை தொடர்பில், ஒரு முறையான நடைமுறையை ஏற்படுத்துவதற்கான ஒரு முதல் படியாகவே இது கருதப்படுகிறது. இந்த தீர்மானத்தினூடாக சமாதானத்தை நோக்கிய ஒரு பாதையை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் சிறிலங்க அரசிற்கு கிடைத்துள்ளது. ஆனால் அரசு இதனை சரியான வழியில் பயன்படுத்திக் கொள்ளுமா அல்லது முந்தைய காலகட்டங்களில் விசாரணைகளுக்கு ஒத்துழைத்த மக்களை மிரட்டியது போன்றே மீண்டும் அச்சுறுத்தல்களில் ஈடுபடுமா என்ற கேள்வியும் எழுகிறது.
அதனால் தீர்மானத்தை முன்மொழிந்ததொடு மட்டும் நின்று விடாமல் மீண்டும் இது தொடர்பான விடயங்களில் சமரச முடிவு ஏற்படுவதற்கான வழிவகைகளையும் செய்வதில் கனடா உள்ளிட்ட நாடுகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். சிறிலங்காவில் இருந்து வந்து பல மனித உரிமைகள் ஆர்வலர்கள் ஜெனிவாவில் பிரதிநிதித்துவம் செய்திருப்பதுடன், இணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்காக துணிச்சலான பல உயிராபத்துமிக்கதுமான பணிகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள். இவர்களையும் பாதுகாப்பதில் கனடா உள்ளிட்ட நாடுகள் தீவிர அக்கறை செலுத்த வேண்டும். ஜெனீவா போன்ற வெளிநாடுகளிலேயே இவர்களை அச்சுறுத்தும் பணிகளை சிறிலங்கா செய்கிறதென்றால் அந்த நாட்டில் உள்ள மக்களால் என்ன செய்ய முடியும் என்ற நிலையையும் சர்வதேச நாடுகள் ஆராய வேண்டும் என்ற கோரிக்கையினையும் இந்த கட்டுரை வாயிலாக முன் வைக்கின்றோம்.