விந்துச் சுரப்பி புற்றுநோய் அறுவை சிகிச்சையால் பயனில்லை - புதிய ஆய்வு
Jul 22 2012 09:35:04
புராஸ்டேட் எனப்படும் விந்துச் சுரப்பி புற்றுநோய்க்கு தற்போதைய நவீன அறுவை சிகிச்சை முறைகளினால் பெரிய பலன் எதுவும் ஏற்படவில்லை என்கிறது புதிய அமெரிக்க ஆய்வு. கடந்த 10 வருடங்களாக இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் தற்போதைய நவீன லேசர் அறுவை சிகிச்சை முறையின் மூலம் குணப்படுத்த முயன்ற பல ஆண்களின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்கிறது இந்த ஆய்வு.
இந்த ஆய்விற்காக அமெரிக்கா முழுவதிலுமுள்ள 731 பாதிக்கப்பட்ட ஆண்கள் கணக்கில் எடுக்கபட்டுள்ளனர். இவர்களுக்கு விந்துச் சுரப்பி புற்றுநோய் இருப்பது முன் கூட்டியே கண்டறியப்பட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 10 வருடங்களாக தொடர்ந்து இவர்களை கண்காணித்ததில் அறுவை சிகிச்சை செய்து கொண்டோரில் 47 விழுக்காடினரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
விந்துச் சுரப்பி புற்றுநோய் என்பது என்ன?
பெண்களுக்கு கர்ப்பப் பை போன்று, தாம்பத்ய உறவின்போது ஆண்களுக்கு உதவுவது புராஸ்டேட் சுரப்பியாகும். ஆண்களுக்கு இந்தச் சுரப்பியில் பொதுவாக 50 வயதுக்கு மேல் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதாவது, ஆண்களுக்கு முதுமையில் புராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடைந்து சிறுநீர்த் தாரையை அழுத்துவதால், சிறுநீர் கழிப்பதில் பிரச்னைகள் ஏற்பட ஆரம்பிக்கும்.
ஒரு ஆண் பருவமடையும் சமயத்தில் இந்தச் சுரப்பி வளர்ச்சியடையத் தொடங்கி பின்னர் 25 வயதுக்குப் பின் விரிவடைந்து கொண்டே இருக்கும். இந்தச் சுரப்பி இயல்பான அளவுக்கு அதிகமாக வீக்கம் அடைந்து, சிறுநீர்ப் பாதையை வெளிப் பக்கமாக இருபுறமும் அழுத்துகிறது.இதனால் சிறுநீர் வெளியேறும் குழாயின் குறுக்களவு சுருங்கி, சிறுநீர் வெளியேறுவது தடைபடுகிறது. சிறுநீர் வெளியேறுவது தடைபட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும். சிறுநீர் முழுமையாக வெளியேறாது.இதனால் சிறுநீர்ப் பையில் சிறுநீர் தேங்கும் நிலை ஏற்படும்.
இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் :
இந்தப் பிரச்னை இரவு நேரத்தில் மிகுந்த தொல்லை கொடுக்கும். அதாவது, சிறுநீரை முழுமையாக வெளியேற்ற முடியாமல், இரவில் சிறுநீர் கழிக்க அடிக்கடி எழுந்து செல்ல வேண்டியிருக்கும். இதனால் தூக்கம் கெடும். ஒரு சிலருக்கு அவசரமாக வலியுடனும், எரிச்சலுடனும் சிறுநீர் வெளியேறும். சிறுநீர்ப் பாதையில் எரிச்சல், வலி, சிறுநீர்ப்பை மற்றும் அடிவயிற்றில் வலி, நோய்த் தொற்று ஆகியவையும் ஏற்பட வாய்ப்பு உண்டு. சிறுநீர்ப் பையில் கற்கள் உண்டாகவும் வாய்ப்பு உண்டு. சிறுநீர்ப் பை தடித்து எரிச்சல் ஏற்படலாம். ஒரு சிலருக்கு காய்ச்சலும் வரலாம்.
கண்டறிவது எப்படி:
புராஸ்டேட் புற்று நோயை உறுதிப்படுத்த, பி.எஸ்.ஏ., (புராஸ்டேட் ஸ்பெசிபிக் ஆன்டிஜன்) என்ற ரத்தப் பரிசோதனை முக்கிய பரிசோதனையாக கருதப்படுகிறது. பி.எஸ்.ஏ., அளவு, 4 நானோ கிராமுக்கு அதிகமாக இருந்தால், பிரச்னை இருப்பதாகக் கருதப்படுகிறது.
தடுப்பு முறைகள் என்ன?
ஆண்கள் 40 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒரு முறை, முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது புராஸ்ட் வீக்கத்தை கண்டுபிடிக்கும் பி.எஸ்.ஏ., ரத்தப் பரிசோதனை செய்ய மறக்கக் கூடாது. தொடர்ந்து, சிறுநீர் பிரச்னை இருந்தால் டாக்டரிடம் ஆலோசிக்க வேண்டும்.
ஹோமாபதி முறையிலும், அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை முறைகளிலும் இதற்கு தீர்வு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையானது. முற்றிலுமாக குணப்படுத்த முடியுமா என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.