க்யோடோ உடன்படிக்கையிலிருந்து கனடா வெளியேறியது சரியா ? - வலுக்கிறது சர்ச்சை
Jul 19 2012 08:01:42
க்யோடோ உடன்படிக்கையிலிருந்து கனடா வெளியேறியது சரியா ? - வலுக்கிறது சர்ச்சை
முதலில் க்யோடோ உடன்படிக்கை என்ன சொல்கிறதென்று பார்ப்போம். அதன் பின்னர் செய்திக்கு வரலாம்.
பசுமைக் குடில் வாயுக்கள் எனப்படும் கார்பன் டை ஆக்சைட், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைட், ஹைட் ரோஃப்ளூரோ கார்பன்ஸ் ஆகியவை வெளியேறுவதால் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டது . இதனால் அகச்சிவப்புக் கதிர்கள் நேரடியாக வளிமண்டலத்திற்குள் வந்து சேர்கின்றன. இதன் விளைவாக் புவி வெப்ப மயமாவதுடன், கடல்மட்டம் உயர்தல், வெள்ளம், பனிப்பாறை நொறுங்குதல் போன்ற பல இயற்கைச் சீரழிவுகள் ஏற்படுகின்றன.
உலக நாடுகள் அனைத்தும் இணைந்து இதனை தடுப்பதற்காக க்யோடோ வில் நடந்த மாநாட்டில் ஓர் ஒப்பந்தம் போட்டார்கள். அதுதான் க்யோடோ உடன்படிக்கை. இதன்படி அனைத்து உலக நாடுகளும் 2011 முதல் தங்கள் பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேற்ற அளவினை 1990ஆம் ஆண்டில் இருந்த அளவிற்கு படிப்படியாகக் குறைக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாத நாடுகள் அபராதம் கட்டவேண்டும். இது வளரும் நாடுகளுக்கு எதிராக இருப்பதாக கருதப்பட்டதால் அவர்களுக்கென சில சலுகைகளும் தரப்பட்டது.
இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு இதில் கையெழுத்திட்ட கனடா தற்போது க்யோடா உடன்படிக்கையிலிருந்து வெளியேறத் தீர்மானித்து விட்டது. கனடிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான டேனியல் டுர்ப், க்யோடா உடன்படிக்கை விடயத்தில் அரசு எடுத்த முடிவு சரியானதல்ல என நீதிமன்றில் வழக்கொன்றை கொண்டு வந்தார்.
க்யோடா உடன்படிக்கையின் கால கட்டமான மூன்றாண்டுகளில் இதிலிருந்து வெளியேற விரும்பும் நாடுகள் எழுத்து பூர்வமாக தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும். விருப்பம் தெரிவித்த பின்னர் ஓராண்டில் அந்நாடு உடன்படிக்கையிலிருந்து வெளியேற்றப்படும் என்பதே க்யோடோவின் விதிமுறை. ஜனவரி .1, 2008. முதல் இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டன.
கனடா க்யோடா ஒப்பந்தத்திலிருந்து வெளியேறப் போவதாக டிசம்பர். 12, 2011 அன்று சுற்றுச்சூழல் அமைச்சர் பீட்டர் கென்ட் அறிவித்தார். அதன்படி பார்த்தால் எதிர்வரும் டிசம்பர். 12, 2012 ல் கனடா வெளியேற்றப்பட்டு விடும். கனடா வெளியேறுவதாக அறிவிக்காவிடினும் கூட இந்த உடன்படிக்கை எதிர்வரும் டிசம்பர். 31, 2012 திகதியுடன் காலாவதியாகிறது என்ற நிலை இருக்கும் போது அரசு பாசாங்கு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பதே டேனியல் டுர்ப்பின் வாதம்.
பாராளுமன்ற உறுப்பினர் கொண்டு வந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது என்ற போதிலும் கூட இந்த வழக்கு தொடர்பாக கனடிய அரசின் சட்ட அவையில் மீண்டும் மேல் முறையீடு செய்யப் போவதாக டேனியல் கூறியுள்ளார். அப்படி நடைபெறும் பட்சத்தில் அரசுக்கு எதிரான போக்கை கொண்டுள்ள எதிர்க்கட்சிகள் இதற்கு ஆதரவளிக்கும் என்பதோடு இப்பிரச்சினை பெரும் அரசியல் பிரச்சினையாக உருவெடுப்பதுடன் கோன்செர்வேற்றிவ் கட்சியின் மறைமுக நடவடிக்கைகளை மக்களுக்கும் வெளிச்சம் போட்டுக் காட்டி விடும் என நம்பப்படுகிறது.
அடுத்த தேர்தலில் கோன்செர்வேற்றிவ் கட்சியின் மீதான குறைபாடாக இப்பிரச்சினை மக்கள் முன்னால் கொண்டு எதிர்க்கட்சிகள் அதிகமான வாக்குகளைப் பெறவும் சாதகமாக அமையலாமே தவிர இதனால் வேறெந்த பலனும் இருக்கப் போவதில்லை என்றே தோன்றுகிறது.
க்யோடோ உடன்படிக்கையிலிருந்து கனடா வெளியேறியது சரியா ? - இ - குருவி வாசகர்களும் தங்கள் கருத்துக்களை எங்கள் இணைய முகவரியில் தெரிவிக்கலாம்