கனடிய அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள C-31 சட்ட மூலத்தில் அகதி மக்களை நாட்டிற்குள் நுழைய விடாதபடி செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஸ்காபுறோ நகர தமிழ் சமூகத்தினரிடையே என்.டி.பி கட்சியின் ஸ்காபுறோ றூஜ் ரிவர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசனும் ,ரொறொண்ரோ டண்போர்த் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கிரேக் ஸ்கொட்டும் விரிவாக கலந்துரையாடினர், இந்த கலந்துரையாடல் கடந்த வியாழக்கிழமை ஸ்காபுறோவில் உள்ள பென்டேல் பொது நூலகத்தில் நடைபெற்றது.
கனடாவிற்கு அகதிகளாக வரும் மக்களை ஏற்றுக் கொள்ளும் விதங்களில் மாற்றங்களைப் புகுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சட்ட வரைவிற்கு நேற்று முன்தினம் கனடிய பாராளுமன்றில் இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட வரைவின் பல அம்சங்கள் வருத்தமளிக்கும் விதத்தில் அமைக்கபப்ட்டுள்ளன என்பது குறித்தும் அதன் பாதகமான அம்சங்கள் குறித்தும் மக்களிடம் இருவரும் விரிவாக விளக்கினார்கள்.
அப்போது அவர்கள் கூறியதாவது,
- முக்கியமாக இதில் இடம் பெற்றுள்ள பல சட்டங்கள் கனடிய மனித உரிமைச் சட்டங்களை மீறும் வகையிலும், சர்வதேச மனித உரிமை, அகதி, சிறார் சட்டங்களை மீறும் வகையிலும் அமைக்கபப்ட்டுள்ளது.
- எந்த வல்லுனர்களையும் கலந்தாலோசிக்காமல் உலகின் பாதுகாப்பான நாடுகள் எவை என்பதை தீர்மானிக்கும் உரிமை முழுவதுமாக குடிவரவுத் துறையின் கைகளில் ஒப்படைக்கபபட்டுள்ளது.
- நாட்டிற்குள் வந்து அகதி உரிமை கோருபவர்களை தடுப்புக் காவலில் வைக்கும் சட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. வருடத்தில் ஒன்றிரண்டு அகதி கோரிக்கைகளை மட்டுமே பரிசீலித்து அங்கீகரிக்கும் வகையில் கடுமையான சட்டங்களை கொன்சவேற்றிவ் அரசாங்கம் கொண்டு வந்துள்ளது . முறைப்படி வராதவர்களை தடுப்புக் காவலில் வைப்பதாக கூறும் அரசு , எதை வைத்து முறைப்படி வராதாவர்கள் என அகதி மக்களை தீர்மானிக்கிறது என்பது விளக்கமாகக் கூறப்படவில்லை. வெறுமனே அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு இதனை தீர்மானிப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்? அரசின் கூற்றுப்படி பார்த்தால் ஒருவராக வருபவர்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படுவார்களா? ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் குடும்பத்துடன் வருபவர்கள்முறைப்படி வராதவர்கள் என்றே விளங்கிக் கொள்ள முடிகிறது.
- குழந்தைகளை உடன் அழைத்து வரும் அகதி பெற்றோர்கள் வேற்று நாட்டவராகக் கருதப்படுவதால் , குழந்தைகளை அவர்கள் தங்களுடன் தடுப்புக் காவலில் வைத்துக் கொள்ள விரும்புகின்றனரா அல்லது பிறர் பராமரிப்பில் விட விருப்பமா என்பதை தெரிவு செய்யும்படி நிர்பந்திக்கப்படும் நிலை உள்ளது.
- குடி வரவு அமைச்சகம் பாதுகாப்பான நாடுகளாக வரையறை செய்யப்பட்ட நாடுகளிலிருந்து வந்துள்ள மக்கள் அனைவரும் வெளிநாட்டவராகவே கருதப்படுவர். இவர்களுக்கு அகதி உரிமை கோரும் உரிமைகளும் கிடையாது என்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
- வெளிநாட்டவராகக் கருதப்படுபவர்கள் நிரந்தர குடியுரிமை பெற குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அவர்கள் மீண்டும் தங்கள் சொந்தங்களுடன் சேர கூடுதலாக 5 ஆண்டுகள் ஆகும். அது வரையிலும் இவர்களால் வேறு எங்கும் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுக்கும் வகையில் பயண ஆவணங்கள் அனைத்தும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விடும்.
- மார்ச் 2009 முதல் கனடாவிற்குள் வந்துள்ள அகதி மக்களின் கோரிக்கையை நிராகரிக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க குடிவரவு அமைச்சரிடமே ஒப்படைகபப்ட்டுள்ளது.
இந்த சட்ட வரைவினை பாராளுமன்ற அவையில் கொண்டு வந்த கொன்சவேற்றிவ் அரசு, மிகக் குறைந்த கால விவாதங்களை மட்டுமே அனுமதித்ததையும் , அதே போன்றே இதற்கான பரிசீலனைக் குழுவிற்கும் குறைந்த அவகாசங்களைக் கொடுத்ததினையும் என்.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் சுட்டிக் காட்டினார்.
பரிசீலனைக் குழுவின் முன் வாக்குமூலம் அளித்த கனடிய சட்டத்தரணிகள் சங்கம், the Barreau du Quebec, அகதிகளுக்கான கனடிய சட்டத்தரணிகள் சங்கம், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையகம் , மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ,அகதிகளுக்கான கனடிய சபை , மருத்துவர்கள் , சித்திரவதை , துன்புருத்தல்களிலிருந்து பிழைத்து சாட்சிளாக கண் முன் நிற்பவர்கள் , மற்றும் பல நிபுணர்களும் புதிய மாற்றங்கள் சட்ட வரைவில் சேர்க்கப்படக்கூடாது என்பதனையும் இந்த சட்ட முன்வரைவு முழுவதுமாக கைவிடப்பட வேண்டும் என்றுமே வலியுறுத்தினர் என்றும் மக்களிடம் தெரிவித்தார்.
அதே நேரத்தில் பரிசீலனைக் குழுவின் முன்னர் வாக்குமூலம் அளித்த கொன்சவேற்றிவ் உறுப்பினர்களின் கேள்விகளையும் கருத்துக்களையும் உற்று நோக்கும் போது அவர்களுக்கு புகலிடம் தேடி வரும் அகதி மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் , அவர்களின் அனுபவங்கள் உள்ளிட்ட விடயங்கள் புரியவே இல்லை என்பதும் அதனை புரிந்து கொள்ள கொன்சவேற்றிவ் கட்சியினர் தயாராக இல்லை என்பதுமே தெரிய வருகிறது.
நிபுணர்கள் தரப்புடன் இணைந்து இந்த சட்ட முன் வரைவினை தடுத்து நிறுத்துவதற்கும் , சர்ச்சைக்குள்ளான மாற்றங்களை எதிர்த்தும் என்.டி.பி எவ்வளவோ போராடியும் கூட அதனை அரசு கவனிக்காமல் சட்ட முன் வரைவினை நிறைவேற்றி விட்டது என ராதிகா குறை கூறினார்.
புதிய சட்ட முன் வரைவின் பாதகங்களை விவரித்துக் கூறிய என்.டி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ராதிகா சிற்சபைஈசனும் , கிரேக் ஸ்காட்டும் இதனால் உண்மையில் பாதிக்கப்படப் போவது ஆட்கடத்தல் பேர்வழிகள் அல்ல, ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக தஞ்சமடைந்திருக்கும் மக்களே என்பதையும் எடுத்துக் கூறினார்.
முக்கியமாக எம்.வி சன் சீ மற்றும் ஓசன் லேடி கப்பல்களில் வந்திறங்கிய தமிழ் அகதி மக்களுக்கு எதிராகவே இந்த சட்ட முன் வரைவு தயாரிக்கபப்டுள்ளது. சிறிலங்காவில் போர் நடைபெற்ற போதும் அதற்குப் பின்னரும் போரின் போது மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜான் பைர்ட் கூறுகிறார். ஆனால் அதே அரசு அங்கிருந்து வந்த அகதி மக்களை அங்கீகரிக்காமல் குடிவரவுத் துறையின் மூலம் கட்டுப்படுத்த நினைப்பது கொன்சவேற்றிவ் அரசின் பாசாங்கு நடவடிக்கைகளை அனைவருக்கும் பகிரங்கமாக எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்துள்ளதாக ராதிகா சிற்சபை ஈசன் கூறியதோடு அரசின் இந்தப் போக்கிற்கு கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.