மாநகர முதல்வர் றொப் போர்ட்டின் தலைமைப் பணியாளர் பதவியை வகித்து வந்த அமீர் ரெம்டுள்ள ரொறொன்ரோ பான் அமெரிக்க விளையாட்டுப் போட்டிகளுக்கான துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதனை ஒழுங்கு படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக மேயர் அலுவலகத்தில் தான் வகித்து வந்த பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். ஜூலை 20 ஆம் திகதியே சிட்டி ஹாலில் அமீர் பணியாற்றும் கடைசி நாளாக இருக்கக் கூடும் எனவும் தெரிகிறது.
இதையடுத்து அமீரின் பதவி விலகல் தொடர்பாக றொப் போர்ட் நேற்று ஊடகங்களுக்கு அளித்த நேர்காணலில் அமீருடன் பணியாற்றியதை பெருமையாக கருதுவதாகவும் , தலைமைப் பணியாளராக சிறப்பாக பணிபுரிந்த அவர் இனி வரும் காலங்களில் ஏற்கவிருக்கும் பொறுப்புக்களிலும் திறம்படச் செயலாற்ற வேண்டும் என விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
மாநகர முதல்வராக றொப் போர்ட் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தலைமைப் பணியாளர் பதவியை வகித்த இரண்டாவது நபர் அமீர். 2010 ல் றொப் போர்ட் மாநகர முதல்வராக பதவியேற்ற போது நிக் கௌவளிஸ் என்பவர் இப்பதவியை வகித்து வந்தார். சில மாதங்களே அவர் பதவியில் நீடித்தார். அவருக்குப் பின்னர் ரொறொன்ரோவின் மிக முக்கியப் பொறுப்புக்களில் ஒன்றாக கருதப்படும் தலைமைப் பணியாளர் பதவியேற்ற அமீர் வாரத்தின் ஏழு நாட்களிலும் கடுமையாக உழைத்துள்ளார் என பலர் புகழாரம் சூட்டியுள்ளனர்.
யாருமே எதிர்பாராத வகையில் ஊழியர் சங்கங்களுடனான பேச்சு வார்த்தைகளை றொப் போர்ட் சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வர காரணமாக இருந்தவர் அமீர் . சமீப காலமாக தனக்கு ஏற்பட்டு வந்த அழுத்தங்களால் தான் அமீர் பதவி விலகியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. அமீருக்குப் பின்னர் அடுத்ததாக இந்த பதவியினை வகிக்கப் போகும் நபர் யார் என்பது குறித்த தகவல் இன்னமும் வெளியிடப்படவில்லை.